Search This Blog

Friday 20 May 2011

ஆசிரியர்- மாணவர் உறவு.

               ஆசிரியர் திறம்படக் கற்பிக்கவும் மாணவர்கள் செம்மையுறக் கற்றிடவும் வகுப்பறையில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே நிலவும் நல்லிணக்கச் சூழலே ஆசிரியர் மாணவர் உறவு எனப்படும்.
பண்டைக்காலத்தில் கல்வி வாழ்வோடு கற்பிக்கப்பட்டு வந்தது. செய்து கற்றல், செய்யக்கற்றல், வாழ்ந்து கற்றல், வாழக்கற்றல் என்பதற்கிணங்க கல்வி கற்றல் என்பது வாழ்வோடு இரண்டறக் கலந்ததாக இருந்ததே தவிர தனித்துக் காணப்படவில்லை.

குருகுல முறைக்கல்வியில் ஆசிரியரும் மாணாக்கனும் தந்தை மகன் உறவு என்ற நிரைலயில் நடந்து கொண்டனர். மாணவனாக ஒரு சிறுவனை ஏற்றுக் கொண்டபின் அவனை ஆசிரியர் தமது குடும்பத்துள் ஒருவனாகக் கருதி தன்மகனிடம் அன்பு செலுத்துவது போன்று இவனிடமும் அன்பு செலுத்த வேண்டும் இதே போன்று மாணாக்கனும் ஆசிரியருக்குக் கீழ்படிந்து அவருக்கான பணிவிடைகள் பலவற்றைச் செய்ய வேண்டும்.
இன்றையச் சூழலில் ஆசிரியர் மாணவர் உறவு மேம்பட பின்வரும் வழிகளை மேற்கொள்ளலாம்.

1. அன்பு காட்டுக,
அன்பே உலகில் வலிமையானதாகும். இந்திரகதியில் இயங்கும் இன்றையச் சூழலில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் உண்மையான அன்புக்காக ஏங்குகின்றனர். தாயும், தந்தையும் பணிபுரிபவர்களாயின் அக்குழந்தைக்கு இருவரது அன்பும் கிட்டாது போய்விட வாய்ப்புள்ளது. பள்ளிக்கு வரும் மாணவனிடத்தில் ஆசிரியர் பாசமுடன் அன்பு காட்ட வேண்டும். அவர்கள் தவறுகள் செய்கின்ற போது அவை மனதில் படும் வண்ணம் சுட்டிக்காட்டி அன்பு வழியில் திருத்த வேண்டும். ஆசிரியர் தம்மீது அன்புகாட்டுகிறார் என்று உணரும் மாணவன் நல்வழியில் செல்ல ஆரம்பிக்கின்றான். ஆசிரியர் தாய்போன்று அன்பு காட்டி, தந்தை போன்று அனைத்துப் பேசி மாணவர்களுக்குப் பாடம் கற்பிக்க வேண்டும் என்று நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம்பிள்ளை கூறுகிறார்.

2. அறிவுத்திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் உற்சாகப்படுத்துதல் வேண்டும்,
அறிவுத் திறன் மிகுந்த மாணவர்களைப் பாராட்டி அவர்கள் மீது மட்டும் தனிக்கவனத்தை செலுத்துதல் கூடாது. அறவுத்திறன் மிகுந்த குழந்தைகளுக்குக் கற்பித்து அவர்களை மேலும் உயர்த்துவது சிறந்ததாகாது. அறிவுத் திறன் குறைந்தவர்களுக்கு அறிவு புகட்டி அவர்களை உயர்வடையச் செய்வதே சாலச்சிறந்தது.
அறிவுத் திறன் குறைந்தவர்களை ஆசிரியர்கள் மற்ற மாணவர்கள் முன்பு தரக்குறைவாக நடத்துதல் கூடாது. அவர்களை அவ்வாறு நடத்தினால் அம்மாணவர்களின் கவனம் கல்வியில் செல்லாது. ஆசிரியர் மாணவர் உறவு பாதிப்படையும். மாறாக அறிவுத்திறன் குறைந்த மாணவர்கள் ஆர்வமுடன் கற்க முயலும் போது அவர்களை உற்சாகப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் அம்மாணவர்கள் கற்க ஊக்கமுடன் முயலுவதோடு, ஆசிரியர் மீது மிகுந்த மதிப்புடன் இருப்பர்.

3. மாணவர் இன்பத்திலும் துன்பத்திலும் பங்குபெறல்,
ஆசிரியர் மாணவர் இருவரும் இரட்டை மாட்டுவண்டியில் பூட்டப்பட்ட இரண்டு காளைமாடுகளைப் போன்றவர்களாக இருத்தல் வேண்டும். மாணவர்கள் தோல்வியுறும் போது வருந்துவர். அவர்களுக்கு உடல்சோர்வோ மனச்சோர்வோ ஏற்பட்டு அவர்கள் வருந்தும் போது அதனைத் தன்னுடையதாகக் கருதி அவர்களுக்கு ஆறுதல் கூற வேண்டும். அவர்களுடைய வருத்தத்தைத் தம்முடையதாகவும் கொண்டு அவர்களது துன்பத்திற்கு ஓர் ஊன்றுகோலாக அமைந்து அவர்களது நலம் நாடவேண்டும், அவ்வாறு செய்தால் ஆசிரியர்கள் மாணவர்கள் உறவு உன்னதநிலையை அடையும்.
மாணவர்கள் வெற்றி பெறும்போது அவர்களது வெற்றியைத் தம்முடைய வெற்றியைப் போல் கருதி மகிழ்ச்சிடையதல்  வேண்டும்.
அவ்வாறு செய்தோமெனில் ஆசிரியர் கூறுகின்றவண்ணம் மாணவர்கள் மனமுவந்து நடப்பர்.
இருவரது உறவும் மேம்பாடடையும். அவர்களது வெற்றியும் அலட்சியப்படுத்துதல் கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களது வெற்றியில் பங்கு கொண்டு மகிழவேண்டும்.

4. மாணவர்களை ஊக்கப்படுத்துதல்;
அகல்விளக்காக இருந்தாலும் தூண்டுகோல் ஒன்று வேண்டும் என்பவர் பெரியோர். ஒவ்வொரு மாணவர்களுக்குச் சமமான வாய்ப்பைக் கொடுத்து ஊக்கமூட்டினால் அவர்கள் திறன்கள் வெளிப்படும். ஆசிரியர்கள் மாணவர்களின் திறன்கள் வெளிப்படுமாறு அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
அவர்களது திறமைகளைக் குறைத்து மதிப்பிடுதல் கூடாது. திறமைகளைக் கண்டறிந்து அதனை வளர்த்தல் வேண்டும். “ஊக்கமே ஆக்கத்திற்குச் சிறந்த வழி” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
திறமைகளை ஊக்குவிக்கும் ஆசிரியர்களையே மாணவர்கள் அதிகம் விரும்புவர்.

5. மாணவர்களின் தவறுகளைக் களைதல்;
தவறு செய்வது மனித இயல்பு பல்வேறு சூழல்களில் இருந்து மாணவர்கள் வருவதால் வகுப்பிலும் பள்ளி வளாகத்திலும் தவறுகள் செய்ய வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு தவறுகள் மாணவர்கள் செய்யும்போது அவர்கள் அதை உணரும் வண்ணம் செய்து திருத்துதல் வேண்டும். அதற்கு மாறாக சிறிய குற்றங்களையே பெரிதாகக் காட்டி அதனை விமர்சித்தல் கூடாது. தவறுகளைச் சுட்டிக்காட்டி அவர்களைத் திருத்துதல் வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளைக் கண்டும் காணாமல் இருத்தல் கூடாது. அது இருவரது உறவிலும் தீய விளைவுகளை ஏற்படுத்தும். மாணவர்கள் தவறுகளை உணர்ந்து மீண்டும் அதுபோன்ற தவறுகளைச் செய்யாதவாறு ஆசிரியர்கள் அவர்களைப் பார்த்துக் கொள்ளல் நலம் பயக்கும். அவ்வாறு செய்தால் மாணவர்கள் தங்களை நல்வழிப்படுத்திய ஆசிரியர்களைப் பெரிதும் மதிப்பார்கள்.