Search This Blog

Saturday 6 April 2013

தமிழர்கள் உணவு பரிமாறும் விதம்..

1. கைக்கு சீக்கிரம் எட்டாத தூரத்தில் உப்பு, உணவுடன் எளிதில் கலக்காது
2. மிளகாய் அல்லது உப்பை தெரியாமல் ருசித்து விட்டால், உடனடியாக உட்கொள்ள இனிப்பு - மிகவும் அருகாமையில்
3,6. நடுவில் முக்கிய உணவான அன்னம் , அதை சுற்றி கூட்டு பொரியல் அவியல் வறுவல் ஊறுகாய்
5. குறைவாக உட்கொள்ள வேண்டிய சித்ரான்னம்
4. அளவாக உட்கொண்டு வயிற்றை பாதுகாத்து கொள்ள கடைசியாக வைக்கப்பட்டிருக்கும் நொறுக்கு தீனி வகைகள்
பல ஆயிரம் ஆண்டுக்கு முன் அறிவியல்: முதலில் பருப்பு மற்றும் நெய்( செரிக்கும் தன்மை குறைந்த பொருட்கள் மற்றும் நமது உணவு குழாயை தன்மையாக்கும் பொருட்கள் ), பிறகு குழம்பு ( ருசியுடன், தன்மையான உணவு குழாயை வருடும் ), பிறகு ரசம் ( இது வரை உண்ட அனைத்தையும் செரிக்கசெய்யும் ), பிறகு மோர் ( வயிறார உண்டபின் உருவாகும் சூட்டைக்குறைக்கும் )..
நன்றி - தமிழ்க்குடில்
தமிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு . சுப காரியங்கள் என்றால் உடனே கும்பம் வைத்து அதன் கீழே தலைவாழை இலையை வைத்து அரிசி பரப்பி கும்பத்தின் மேலே தேங்காய் வைப்பது வழமை . இது தமிழர்கள் தமது பாரம்பரியமாகவே செய்து வருகிறார்கள் .

நாம் எல்லோரும் எமது வீடுகளில் முற்றம் இருந்தால் வாழை மரங்களை நாட்டி விடுவது வழமை . ஏனெனில் அது எந்த இடத்திலும் வளரும் . மற்றது எமக்கு தேவையான நேரங்களில் இலை வெட்டலாம் தானே . விரத நாட்கள் என்றால் நாம் அங்கும் , இங்கும் வாழை இலை தேடி திரிய தேவையில்லையே . உடனே வெட்டி எடுக்கலாம் தானே . வாழை குலை எடுக்கலாம் , வாழை பொத்தி எடுக்கலாம் என்று நிறைய பயன் எங்களுக்கு வாழை மரத்தால் கிடைக்கும் என்பதனால் கூடுதலாக எல்லோரது வீடுகளிலும் வாழை மரத்தை வளர்ப்பதுண்டு .

வாழை இலை, பாரம்பரியமாக உணவுண்ண பயன்படுத்தி வருகிறோம். இவ்விலையில் சோறுண்டால் நல்வாழ்க்கை அமையும் என்பது நம்பிக்கை ஆகும் . வாழை இலையில் உணவு பரிமாறுவது தமிழர்களாகிய எமது விருந்தோம்பல் கலாச்சாரத்தில் முதலிடம் வகிக்கிறது.
நாம் சூடான உணவுகளை இவ்விலையில் வைத்து பரிமாறும் போது அதில் ஒருவித மணம் தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால் தான் நாம் இவ்விலையில் சாப்பிட்டு வருகிறோம். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால் தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம், வலிமைக்குறைவு, இளைப்பு போன்ற பாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
வாழையிலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழையிலையின் மேல் உள்ள பச்சைத் தன்மை (குளோரோபில்) உணவை எளிதில் சீரணமடையச் செய்வதுடன் வயிற்றுப் புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. நன்கு பசியைத் தூண்டும். வாழையிலையில் உண்பவர்கள் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ்வார்கள்.
அலுவலகம் செல்லும் அதிகாரிகள், பணியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் மதிய உணவை பார்சலாக எடுத்துச் செல்ல வாழை இலை சிறந்தது. சோறு பழுதாகாமல் அப்படியே இருக்கும் . குழந்தைகள், மாணவ, மாணவிகள் மதிய உணவு கொண்டு செல்ல வாழை இலை பயன்மிக்கது. கல்யாண வீடுகள், பொது விழாக்கள், அன்னதானம் விருந்து வைபவங்களுக்கு உணவு பரிமாறுவதுக்கு வாழை இலைகள் தான் பெரிதும் பயன்படுகின்றன . எல்லோரும் சாப்பிட்டவுடன் உடனே எரிந்து விடலாம் . எல்லோருக்கும் சுலபம் . விலையும் குறைவு .
வாழைமரத்தில் இருந்து நாம் பல பயன்களை பெற்று வருகின்றோம் . அதில் வாழை இலையின் பயன்பாடும் முக்கியம் .
தீ விபத்திலிருந்து மீண்டவர்களையும், தீக்காயம் பட்டவர்களையும் வாழை இலையின் மீது படுக்க வைத்தால் அதில் உள்ள பச்சைத் தன்மை தீக்காயத்தின் எரிச்சலைப் போக்கும். புண்களில் இவ்விலையை எண்ணெய் தேய்த்து வைத்து கட்டி வர எளிதில் குணமாகும். முதலில் இலையின் மேற்புறத்தை புண்ணின் மீது வைத்து 2 நாட்கள் கட்ட வேண்டும். அதன்பின்னர், இலையின் அடிப்புறம் புண் மீது படுமாறு வைத்து அடுத்த 2 நாட்கள் கட்ட வேண்டும்.

Friday 5 April 2013

தமிழக வரலாற்றை மாற்றிய போர் (திருப்புறம்பியப் போர்)..

பாண்டியர்/பல்லவர் போட்டி

1. மதுரை
2. தஞ்சை
3. திருப்புறம்பியம்
4. காஞ்சி
5. திருச்சிராப்பள்ளி
6. உறையூர்
7.வஞ்சி

M - முத்தரையர்
C - சோழர்
SR - சம்புவராயர்
AD - அதியமான்
ML - மலையமான்
V - வேளிர்





விஜயாலய சோழனின் மகன் ஆதித்த சோழன் எதிர்காலத் திட்டமொன்றை மிகவும் தொலைநோக்குடன் போட்டிருந்தார். பாண்டிய பல்லவ ராஷ்ட்ரகூடப் பேரரசுகளின் கதி எந்தத் திக்கை நோக்கிப்போகிறது என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது.

கிபி 250-இல் தென்னகம் வந்து கிபி 340 அளவில் தமிழகத்தில் காலூன்றிக்கொண்டுவிட்ட பல்லவர்கள் ஒரு பேரரசை நிறுவிக்கொண்டவர்கள்; பல்லவநாட்டைவிடப் பன்மடங்கு பெரிதான சாளுக்கியப் பேரரசையும் சமுத்திரகுப்தனின் சமுத்திரம்போன்ற படைகளையும் எதிர்த்து நின்று வெற்றியும் பெற்றவர்கள். அந்த பழக்க தோஷத்தினாலோ என்னவோ வருங்காலத்தைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.

ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சிபுரிந்து பழக்கப்பட்டவர்கள் பாண்டியர்கள். பன்னெடுங்காலமாக கடற்கோள்கள், போர்கள், பஞ்சம், முதலிய பலவகையான மிரட்டல்களைச் சமாளித்தவர்கள்.

களப்பிரரை அடக்கிய பாண்டியன் கடுங்கோன் காலம் தொடங்கி நாட்டை விரிவு படுத்திக்கொண்டும் எதிர்ப்புகளைச் சமாளித்துக்கொண்டும் இருந்து பழக்கப்பட்டுவிட்ட பாண்டியர்களும் உணரவில்லை.

முன்னால் குறிப்பிடப்பட்ட பல்லவ பாண்டியப் போர்களில் கிட்டத்தட்ட அனைத்துமே பல்லவ நாட்டிற்குள் நிகழ்ந்தவை. சோழநாட்டின் வடவெல்லைக்கும் பல்லவநாட்டிற்குள்ளும் போரைக் கொண்டு சென்றவர்கள் பாண்டியர்கள். சேரநாடு, இலங்கை முதலிய இடங்களுக்குள்ளும் படைகளை அனுப்பிப் போரிட்டிருக்கின்றனர்.

பாண்டியர்கள் Agressive War புரிந்து பழக்கப்பட்டவர்கள்.

இருநூறு ஆண்டுகளில் அவர்கள் புரிந்த ஐம்பத்தேழு போர்களில் பெரும்பான்மையானவற்றில் அவர்களே வென்றிருக்கிறார்கள். அவர்கள் தாக்கப்பட்டதைவிட அவர்கள் தாக்கியதே அதிகமாகத் தெரிகிறது.

ஆகவே தங்களுடைய Aggressive Wars மூலம் ஒரு பெரும் பேரரசை ஏற்படுத்திவிடவேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்க வேண்டும்.

'இனிமேல் தமிழகத்தில் ஒரு பெரும் பேரரசு தோன்றுமானால் அது பாண்டியப் பேரரசுவாகத்தான் இருக்கும்; இருக்கவேண்டும்', என்று மனப்பூர்வமாக நம்பியிருந்திருக்கின்றனர். வேறுவகையாக சிந்திப்பதற்கு அவர்களின் Mind-set இடம் கொடுக்கவில்லை.

பாண்டிய பல்லவ ஆதிக்கப்போட்டியின் இறுதியான நாற்பத்தாறு ஆண்டுகளில் நடைபெற்ற ஆறு போர்களினால் பல்லவர்களும், ஏழு போர்களினால் பாண்டியர்களும் கை சளைத்திருந்தனர். 854-இல் நடைபெற்ற குடமூக்குப்போர் பெரும்போர். அதை அடுத்து எட்டே ஆண்டுகளில் 862-இல் நடைபெற்ற அரிசிலாற்றுப் போர்தான் இரு தரப்பினரையும் பெரிதும் பலவீனப்படுத்திவிட்டது. அதைத் தொடர்ந்து நடந்த இடவைப் போரும் பெரும்பாதிப்பை ஏற்படுத்திவிட்டது.

பதினெட்டு ஆண்டுகளுக்குள்ளாக ஒரு பெரிய Show-down-ஐ இருதரப்பினரும் எதிர்நோக்க வேண்டியிருந்தது.

திருப்புறம்பியத்தில் பல்லவன் நிருபதுங்க பல்லவரின் சார்பாக அவர் மகன் அபராஜித பல்லவன் தலைமை தாங்கினார். அவருடைய உறவினராகிய கங்கமன்னர் பிருதிவீபதியும் அவருடைய படைகளைக் கொண்டு வந்திருந்தார். ஆதித்த சோழரின் படைகளும் சேர்ந்து பெரும் படை உருவாகியிருந்தது.

இவர்களை எதிர்த்து இரண்டாம் வரகுண பாண்டியர் தம் படைகளுடன் நின்றார்.

போர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது பிருதிவீபதியின் தலைமையில் அவருடைய படைகள் பாண்டியப்படைகளின்மீது பெருத்த சேதத்தை ஏற்படுத்திவிட்டன.

வரகுண பாண்டியர் ஒப்புயர்வு காணமுடியாத அளவுக்கு வீரத்தைக் காட்டினார். கங்கப்படைகளால் ஏற்படுத்தப்பட்ட பெருஞ்சேதம் அவருக்குச் சீற்றத்தை ஊட்டிவிட்டது.

போரின்போது பிருதிவீபதி ஏறியிருந்த யானையின்மீது வரகுண பாண்டியர் பாய்ந்து அவரைக் கொன்றுவிட்டார்.

ஆனால் பிருதிவீபதி இறக்குமுன்பே போரின் போக்கைப் பல்லவர்களுக்கு முழுமையாக சாதகமாக ஆக்கிவிட்டுவிட்டார்.

பல்லவ வெற்றி உறுதியாகிவிட்டது.

'தன் உயிரைக் கொடுத்து அபராஜிதனை அபராஜிதனாகவே ஆக்கிவிட்டார்' என்று கங்கர்களின் உதயேந்திரக் கல்வெட்டு கூறுகிறது.
அபராஜிதன் - அ + பர + ஜிதன் = எதிரிகளால் வெல்லப்படமுடியாதவன்.

திருப்புறம்பியத்தில் பிருதிவீபதிக்கு பள்ளிப்படைக்கோயில் ஒன்றை எழுப்பினார்கள்.
போரில் வீத்தைக் காட்டி உயிர்துறக்கும் மன்னர்களுக்குப் பள்ளிப்படை கோயிலை எழுப்புவது அக்கால வழக்கம். இன்றும் அந்தக் கோயில் இருக்கிறது என்பார்கள்.

பாண்டியர்கள் அந்தப் போரினால் தங்களின் சாம்ராஜ்ய அந்தஸ்தை இழந்தனர்.

பல்லவர்கள் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தாலும்கூட அவர்களும் தங்களின் வலுவை இழந்தார்கள்.

திருப்புறம்பியப் போரின் விளைவால் ஆதித்த சோழருக்குப் பெருத்த லாபமேற்பட்டது.

சோழநாடு முழுவதும், பாண்டிநாட்டின் வடபகுதி, முத்தரையரின் நாட்டின் மிச்சம் மீதாரி முதலியவை அவருக்குக் கொடுக்கப்பட்டன.

திருப்புறம்பியப் போர் முடிந்து இரண்டே ஆண்டுகளில் நிருபதுங்கவர்ம பல்லவர் இறந்துபோனார்.
அதே 882-ஆம் ஆண்டில் ஆதித்த சோழர் தொண்டைநாட்டின் பெரும்பகுதியைக் கைப்பற்றிக் கொண்டார்.
வலிவிழந்து போன அபராஜிதவர்மர் இன்றைய ஆந்திராவின் தென்பகுதியில் இருந்த பிரதேசத்தை ஆண்டுகொண்டிருந்தார்.

ஆதித்தரின் மகனாகிய பராந்தக சோழர் அபராஜித பல்லவரை முறியடித்து பல்லவர் மேலாதிக்கத்தை இல்லாமல் செய்துவிட்டார்.

கடைச்சங்க காலத்தின் முடிவிற்குப் பின்னர் ஆறு நூற்றாண்டுகளாகத் தங்களின் சுய உரிமையை விட்டுவிட்டு, தங்களின் சொந்த நாட்டின் பெரும் பகுதியையும் முத்தரையரிடமும் பல்லவர்களிடமும் விட்டுவிட்டு சிறிய பிரதேசத்தை மட்டுமே ஆண்டுகொண்டிருந்த சோழர் குடியின் தாழ்ந்த நிலைக்குப் ஆதித்த சோழரும் பராந்தக சோழரும் பரிகாரம் தேடிக்கொண்டு பழியும் வாங்கிக்கொண்டனர்.

கி.பி 904-இல் தமிழகத்தின் பெரும்பகுதி சோழநாட்டிற்குள் வந்துவிட்டது.

பாண்டியர் அத்தனை தோல்விகண்டும் 890-இல் நடந்த இன்னொரு போரில் பெண்ணாகடத்தை அழித்தார்.

சோழர்கள் பாண்டியநாட்டைப் பிடிக்கும் முயற்சியை மேற்கொண்டனர்.

இந்த முயற்சி கிட்டத்தட்ட பல ஆண்டுகள் நடந்து, 966-இல் சோழர்களிடம் பாண்டியநாடு சென்றது. இருப்பினும் பாண்டியர்கள் ஆங்காங்கு இருந்துகொண்டு போராடிக்கொண்டே யிருந்தனர். ராஜராஜ சோழர் காலத்திலும் ராஜேந்திர சோழர் காலத்திலும்கூட அவர்கள் போராடினர். கடைசியில் ராஜேந்திர சோழர் காலத்தில் பாண்டிய அரச வம்சத்தை நீக்கிவிட்டு, தம் சொந்த மகன்களை 'சோழபாண்டியர்' என்ற பட்டத்தோடு பாண்டியநாட்டை ஆளுமாறு செய்தார். அவர் காலத்தில் சோழநாடு மிகபெரிய அளவில் பரந்துவிரிந்தது

கசியும் மௌனம்...... நிஜமாய் வாழ கனவைத் தின்னு!


ஒரு ஆரம்பப் பள்ளியின் அரிய புரட்சி


உங்களால் நம்ப முடியுமா? ஒரு குக்கிராமத்திலிருக்கும் துவக்கப் பள்ளிக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் வந்துபோகிறார். கல்வித்துறை உயரதிகாரிகள் வந்துபோகின்றனர். அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வந்துசெல்கிறார். ஒரு தேசியக்கட்சியின் மாநிலச் செயலாளர் பள்ளிக்கு வந்துசெல்கிறார். விஜய் தொலைக்காட்சி 2013 புத்தாண்டில் தன் முகங்கள் நிகழ்ச்சியில் தமிழகத்தில் தலைசிறந்த அரசுப் பள்ளி என தேர்வு செய்து அறிவிக்கின்றது. ஆந்திராவில் துணை மாவட்ட ஆட்சியராகப் பணிபுரியும் தமிழக IAS அதிகாரி தனது பகுதியிலும் இதேபோல் செயல்படுத்த விரும்புவதாக தொலைபேசுகிறார். பக்கத்து மாநிலங்களிலிருந்து ஒரு சுற்றுலா போல வந்துபோகின்றனர். 

…….. இங்கே எழுதப்பட்டது ஒருசில மட்டுமே, எழுத மறந்தது ஏராளம்.





இத்தனைபேரும் விழிவிரியப் பார்க்கவும், அளவிற்கதிமாக நேசிக்கவும் என்ன காரணம்?



இரண்டு ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழகத்தில் இருக்கும் ஆயிரக்கணக்கான ஊராட்சிய ஒன்றிய துவக்கப்பள்ளிகளில் ஒன்றுதான் இந்தப்பள்ளியும். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்திலிருந்து அன்னூர் செல்லும் சாலையில் 5வது கி.மீ தொலைவில் காரமடை, சிறுமுகை நான்குசாலைப் பிரிவில் சிறுமுகை செல்லும் சாலையில் சென்றால் மௌனமாய் உலகிற்கு ஒரு முன்மாதிரியாய் நிமிர்ந்து நிற்கின்றது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய அரசு துவக்கப்பள்ளி.





முதலில் தன்மீதும் அடுத்து பிறர்மீது குற்றம் காணாத மனிதன் சர்வநிச்சயமாக முன்னேறியே தீருவான். தன் சமூகத்தையும் முன்னேற்றுவான். அப்படிப்பட்ட மனிதர்களாகத்தான் தெரிகின்றனர், இந்த பள்ளியில் பணியாற்றும் தலைமையாசிரியை திருமதி. சரஸ்வதி மற்றும் ஆசிரியர் திரு.ஃப்ராங்ளின் ஆகியோர்.





தங்களிடம் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு ஒரு உன்னதமான கல்வி அனுபவத்தை தந்துவிடவேண்டுமென வேட்கை கொண்ட ஆசிரியர் ஃப்ராங்ளின் தலைமையாசிரியை உதவியுடன் பள்ளியில் இருக்கும் இரண்டு வருப்பறையில் ஒன்றை முதலில் புதுப்பிக்க முடிவெடுக்கிறார்.



ஆசிரியர்கள் இருவரும் தங்கள் பணத்தில் பெரிய தொகையை ஒன்றினை அளித்து அந்த வேள்வியைத் தொடங்குகின்றனர். வளரும் தலைமுறைக்காகத் தொடங்கிய வேள்வியில் அவர்களின் பங்களிப்பு, அர்ப்பணிப்பு, நோக்கம் ஆகியவற்றை உணர்ந்த, அவர்களின் செயல்பாட்டின் மேல் அன்பும் மரியாதையும் நம்பிக்கையும் கொண்ட கிராமத்தினரின் ”கிராம கல்விக்குழு”வும் கை கோர்க்க நான்கே மாதத்தில் சுமார் ரு.2.5 லட்சம் செலவில் ஒரு வகுப்பறை முற்றிலும் நவீனப்படுத்தப்படுகிறது. 2011ம் கல்வியாண்டில் பள்ளிக்கு வந்த குழந்தைகளுக்கு பேரதிசயம் காத்திருந்தது. அதுவரைக் கண்டிராத ஒரு புதுச்சூழலுக்குள் தங்களைப் புகுத்திக் கொள்கின்றனர்.







பள்ளி குறித்த செய்திகள் இணையம், வார இதழ்கள், தொலைக்காட்சி வாயிலாக உலகத்திற்குத் ஓரளவு தெரியவருகின்றது. இதைக் கேள்விப்பட்ட கோவை மாவட்ட ஆட்சியர்  எம்.கருணாகரன் அவர்கள் வருகை தந்ததோடு, இதே போன்று மாவட்டத்தில் விரிவாக்கம் செய்ய, முதற்கட்டமாக ஆனைகட்டி, பொள்ளாச்சி, தொண்டாமுத்துார் உட்பட நான்கு பள்ளிகளை சீரமைக்க உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்கிறார்.





பள்ளியின் ஒரு வகுப்பறையை மட்டும் செம்மைப் படுத்தியதோடு நின்றுவிடாமல், மேலும் பொதுமக்கள் நிதியோடும், ஆட்சியர் வாயிலாகவும், ”அனைவருக்கும் கல்வி திட்டம்” வாயிலாகவும் நிதி பெற்று அடுத்தடுத்த பணிகளை இராமம்பாளையம் பள்ளியில் மேற்கொள்கின்றனர்.



பள்ளி சுற்றுச்சுவர் ரூ.4,50,000 செலவில் கட்டப்படுகிறது (இதில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ.3,08,000, மீதி நன்கொடை). அடுத்ததாக அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மூலம் ரூ. 5,00,000 நிதிபெற்று அதோடு மேலும் நிதிதிரட்டி ரூ.6,25,000 மதிப்பில் பள்ளிக்கு ஒரு கணினி ஆய்வகக் கட்டிடம் 11 கனிணிகளோடு அமைக்கப்படுகிறது. கோவை மாவட்ட ஆட்சியர் அவர்களின் நிதி ஒதுக்கீட்டில் ரூ.3,00,000 மதிப்பில் இரண்டாவது வகுப்பறை கிரானைட் தளம், குளிர்சாதனக் கருவி என அற்புதமாக வடிவமைக்கின்றனர்.






இப்போது இராமம்பாளையம் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி…



  • 11 கனிணிகள் கொண்ட ஆய்வகத்துடன், இரண்டு வகுப்பறைகள்
  • குளிர்சாதனம் பொருத்தப்பட்ட (A/c) வகுப்பறை
  • டைல்ஸ் / கிரானைட் தரை 
  • தரமான பச்சை வண்ணப்பலகை 
  • வகுப்பறைக்குள் குடிநீர் குழாய்
  • சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர், 
  • வெந்நீர், சாதா நீருக்கு என தனித்தனி குழாய்கள்
  • தெர்மோகூல் கூரை
  • மின்விசிறிகள்
  • உயர்தர நவீன விளக்குகள்
  • கூரையில் பொருத்தப்பட்ட நவீன ஒலிபெருக்கிகள்
  • மாணவர்கள் எழுதிப்பழக மட்டஉயர பச்சை வண்ணப்பலகை,
  • வேதியியல் உபகரணங்கள்
  • கணித ஆய்வக உபகரணங்கள்
  • முனைகளில் இடித்து பாதிக்கப்படாமல் மாணவ மாணவியர் அமர்ந்து படிக்க வட்டமேசைகள்
  • மேசைகளின் கீழ்ப்பகுதியில் ஒருவரையொருவர் உதைக்காவண்ணம் தடுப்புகள்
  • அமரும் நாற்காலிகளிலேயே புத்தகங்களை வைத்துச்செல்ல பெட்டி வசதி
  • மாணவர்களின் செய்முறைத் திறமையை வெளிப்படுத்தப் பலகை
  • அனைவருக்கும் தரமான சீருடை
  • காலுறைகளுடன் கூடிய காலணி
  • முதலுதவிப்பெட்டி
  • தீயணைப்புக்கருவி
  • காணொளிகளை ஒளி(லி)பரப்ப டிவிடி சாதனம்
  • LCD புரஜெக்ட்டர் ……………………….. ஆகியவற்றோடு உலகத்திற்கே ஒரு முன்மாதிரி அரசுப்பள்ளியாக நிமிர்ந்து நிற்கின்றது



சுதந்திரம் பெற்று 65 ஆண்டுகளான பின்பும் இந்தியா முழுக்க கல்வி ஒரு கடைமையாக மட்டுமே பாவிக்கப்பட்டு வரும் சூழலில், இது எப்படி சாத்தியமானது, இதெல்லாம் ஓர் நாளில் வந்ததா?



இதையெல்லாம் செய்ய வைத்தது ஒற்றை மனிதனின் ஓங்கிய கனவு. ஒரே ஒரு மனிதன், தன்சிந்தையில் கருவாக்கி தனக்குள் அடைகாத்து சரியான நேரத்தில், சரியான இடத்தில் பிரசவித்ததின் விளைவே இது. ஆம், இது அத்தனையும் ஆசிரியர் திரு. பிராங்கிளின் அவர்களின் கனவினாலும், சரஸ்வதி டீச்சரின் ஒத்துழைப்பினாலும் மட்டுமே சாத்தியமானது. 






ஒரு காலத்தில் நூறு பிள்ளைகள் படித்த அந்தப்பள்ளியில் 5ம்வகுப்பு வரை மொத்தமே வெறும் 30 பிள்ளைகள் மட்டுமே படிக்கும் நிலைக்கு சுருங்கிப்போனது. கல்வி வியாபாரத்தில் தங்களை முதலீடு செய்ய வசதி இல்லாதவர்களின் கடைசிப்புகலிடமாக அரசுப்பள்ளிகள் மாறிப்போன காலம்தானே இது. ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் அரசுப்பள்ளியில் ஆயிரமாயிரம் பேர்படித்து பலனடைந்த வரலாறு ஒரு முற்றுப்புள்ளியை எட்டிவிடுமோ என்ற அச்சத்தைப் போக்க மிக அவசியத்தேவை மாற்றம் என்பதே.



இந்த கல்வியாண்டின் துவக்கத்தில் 27 மாணவர்களுடன் துவங்கிய இப்பள்ளியில் இன்று 62 மாணவர்கள் பயின்று வருகின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் தனியார் ஆங்கிலவழிக் கல்வி பள்ளியில் பயின்ற மாணவர்களும் இப்பள்ளியில் சேர்ந்துள்ள அதிசயமும் நிகழ்ந்துள்ளது.



காசு கொடுக்க முடியாத பிள்ளைகளுக்கு கல்வியை சரியாய் அளிக்க வேண்டும் எனும் வேட்கையில் யோசிக்க ஆரம்பித்தவர்கள், தங்கள் மனதில் தோன்றியதையெல்லாம் செதுக்கி, பட்டைதீட்டி, இன்றைக்கு தமிழகத்தின் எந்த ஒரு பள்ளியும் தரமுடியாத ஒரு தரத்தை, ஆரோக்கியத்தை, சுகாதாரமான கல்வியை செய்துகாட்டத் தொடங்கியுள்ளனர்.



ஆசிரியர்கள் இருவரும் இணைந்து கல்வித் துறையில் இப்படியும் புரட்சி செய்யமுடியும் என தங்கள் அர்பணிப்புக் கொடையால் ஒரு எடுத்துக்காட்டை உலகத்திற்குப் படைத்துவிட்டனர். தான் செய்யும் பணியை உயர்வாய், உயிராய் நேசித்ததன் விளைவே இது.




   

மாற்றத்தை நிகழ்த்த சரியான மனிதர்களின் ஒத்துழைப்பை ஈட்டிவிட்டால் போதுமென்ற தன்னம்பிக்கையோடு தங்களை முன்னுதரணமாக நிறுத்திக்கொண்டு தொடங்கியவேள்வியில் கிட்டத்தட்ட சாதித்துவிட்டனர்.



திட்டத்திற்கு ஒத்துழைப்புக் கொடுத்த கிராமத் தலைவரிடம் எப்படி தங்களால் ஒத்துழைப்பும், நிதியும் அளிக்க முடிந்தது எனக் கேட்டால் அவரின் ஒரே வார்த்தை “ஆசிரியர்கள் மேல் தங்களுக்கிருந்த நம்பிக்கை மட்டுமே” என்பதுதான்.



வெறுமென ஒரு சாதாரண ஆசிரியர்களாக மட்டும் அந்தப் பள்ளியில் செயல்படாமல் குழந்தைகளை ஒரு பெற்றோர் மனோபாவத்திலிருந்து வழிநடத்திக் கற்பிக்கின்றனர். யாரையும் எதற்கும் அடித்ததில்லை. உரிமையாய் பிள்ளைகள் ஆசிரியர் ஃப்ராங்ளின் மீது ஏறி விளையாடுவதும் கூட எப்போதாவது நடப்பதுண்டாம்.



“பிள்ளைகளுக்கு கல்வியோடு சுய ஒழுக்கம், சூழல்களை எதிர்கொள்ளும் பக்குவம், நேர்த்தியாக வாழ்வது என எல்லாமே கற்றுக்கொடுக்கிறோம். இங்கிருந்து வெளியேறும் மாணவன் எவரொருவருடனும் போட்டியிட தயாராக இருக்க வேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம்” என்கிறார் ஃப்ராங்ளின்.



புதுப்பிக்கப்பட்ட வகுப்பறையில் இரண்டு வருடங்களாக புழங்குவது ஐந்து முதல் பத்து வயதுவரை இருக்கும் பிள்ளைகளேயாயினும் இதுவரை ஒரேயொரு இடத்தில் கூட ஒரு பொட்டு அழுக்கு படவில்லை. எப்படி சாத்தியம் இது எனக் கேட்டால், “மாணவனுக்கு சுவற்றில் அழுக்கு செய்தால்,அதை சுத்தம் செய்வது எவ்ளோ கடினம் என்பதையும், மீண்டும் வர்ணம் பூச ஆகும் செலவுகள் குறித்தும் எடுத்துக் கூறியிருப்பதால், ஒரு துளி அழுக்குப்படாமல் இருக்கின்றது” என்கிறார். பிள்ளைகளுள் படிந்திருக்கும் ஒழுக்கம், அந்த ஆசிரியர்களின், உழைப்பு, திறமை, அர்பணிப்புத்தன்மை, தியாகத்திற்கு கிடைக்கும் மாபெரும் அங்கீகாரமாகும்.



பிள்ளைகளுக்கு ஆங்கிலப் பயிற்சி, யோகாப் பயிற்சி, ஓவியப்பயிற்சி, விளையாட்டு பயிற்சி, தலைமைப்பண்பு பயிற்சி, செய்தித்தாள்கள் வாசிப்பு பயிற்சி என அனைத்துவிதப் பயிற்சிகளும் சிறப்பாக அளிக்கப்படுகிறது. மாணவர்களின் சேமிப்பு பழக்கத்தை வளர்க்க தனித்தனி அஞ்சலகக் கணக்குகளில் சிறுசேமிப்பு. முன்னிரவு நேரத்தில் தொலைக்காட்சி பார்ப்பதில் குழந்தைகள் சிதைந்துவிடக்கூடாது என்பதற்காக அந்த நேரத்தில் சிறப்பு வகுப்பு நடத்தவும் அனுமதிபெற்று அதையும் திறம்படத் துவங்கியுள்ளனர்.





மாணவ - மாணவியருக்கான தனித்தனி கழிப்பறை வசதியும், விளையாட மைதான வசதியும் சிறப்பாக உள்ளது. சீருடைகள், கழுத்தணி, காலணி, அரைக்கச்சை, அடையாள அட்டை,ஆசிரியர்,  மாணவர் பெற்றோர் இணைப்புக்கையேடு ஆகியவை இலவசமாக வழங்கப்படுகிறது.



ஓய்வுபெறும் கட்டத்திற்கு நகர்ந்து கொண்டிருக்கும் ஆசிரியை சரஸ்வதி அவர்களும், இந்தத் திட்டங்களின் பிதாமகனான ஃப்ராங்களின் அவர்களுக்கும் சமகாலச் சமுதாயத்தின்முன் உதாரணங்களாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். தனக்கோ, பிறருக்கோ, சமூகத்திற்கு ஏதாவது செய்திடவேண்டும் எனும் வேட்கை எல்லோருக்குள்ளும் இருப்பது இயல்புதான். “சம்பளத்திற்கு உழைப்போம்” என்ற மனோபாவம் நீக்கமற படிந்து போன சமூகத்தில் தங்களை முழுதும் ஈடுபடுத்தி, எவரொருவரும் செய்திடாத அதிசயத்தை, அற்புதத்தை சப்தமில்லாமல் செய்திட்ட இந்த ஆசிரியர்கள் இந்திய அளவிலும், உலக அளவிலும் அடையாளப் படுத்தப்பட வேண்டியவர்கள். எடுத்துக்காட்டுகளாக முன்னிறுத்தப்பட வேண்டியவர்கள். இவர்களைச் சரிவர பாராட்டுவதும், இவர்களின் தியாகத்தை, உழைப்பை அங்கீகரிப்பதும் அரசுகளின், சமூக அமைப்புகளின், ஊடகங்களின் மிக முக்கியக் கடமை. இவர்கள் செய்த பணியை தங்கள் பகுதிக்கும் விரிவுபடுத்த வேண்டியது சக ஆசிரியர்கள், சக மனிதர்களின் தலையாயக் கடமை.



ஓங்கிய முழக்கத்தோடு எதையோ எதிலிருந்தோ மீட்கப்போவது மட்டும்தான் புரட்சியா? அமைதியாய் மௌனமாய் நிகழ்த்துவதும் மாற்றத்தை நிகழ்த்துவதும் புரட்சிதான்!

இந்தக் கல்விப் புரட்சியாளர்களைக் கொண்டாடுவோம், முன்மாதிரியா எடுத்துக்கொள்வோம், மனதார வாழ்த்துவோம்.


ஃப்ராங்ளின் அவர்களைத் தொடர்புகொள்ள...99424 72672
franklinmtp@gmail.com,